காதலியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி: காதலியின் பெற்றோரை தாக்கிய காதலன் உட்பட 2 பேர் கைது

சாம்ராஜ்நகர் அருகே காதலியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற கணவன்- மனைவி மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதலுக்கு எதிர்ப்பு

சாம்ராஜ்நகர் தாலுகா கெல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் விஜய், அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர், அவருக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதை அறிந்த விஜய் கடும் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜய் தனது நண்பர் ரமேஷ் உள்பட 3 பேருடன் தனது காதலியின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கணவன்- மனைவி மீது தாக்குதல்

அப்போது வீட்டில் இருந்த இளம்பெண்ணின் தாய், தந்தையிடம், உங்களது மகளை நான் காதலிக்கிறேன். நீங்கள் வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்தால், நடப்பதே வேறு என்று விஜய் கூறியுள்ளார். இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் விஜய் உள்பட 4 பேரும், அவர்களுடன் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் 4 பேரும் சேர்ந்து பெண்ணின் பெற்றோரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர்கள் கூச்சல்போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்துள்ளனர். இதை அறிந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சாம்ராஜ்நகர் புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய விஜய், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

+